பென்னாகரம் அருகே கிணற்றில் தூர்வாரிய போது இரும்பு கயிறு அறுந்து தொழிலாளி பரிதாப சாவு 4 பேர் படுகாயம்


பென்னாகரம் அருகே கிணற்றில் தூர்வாரிய போது இரும்பு கயிறு அறுந்து தொழிலாளி பரிதாப சாவு 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2019 10:45 PM GMT (Updated: 4 March 2019 1:47 PM GMT)

பென்னாகரம் அருகே கிணற்றில் தூர்வாரிய போது இரும்பு கயிறு அறுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் கரியம்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள 60 அடி ஆழ விவசாய கிணறு தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் முருகன் கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இந்த பணியில் பென்னாகரம் அருகே உள்ள பெரியபுதூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குப்புசாமி (வயது 60), முருகன் (50), பழனி (50), முனியப்பன் (55), பெருமாள் (45) ஆகியோர் ஈடுபட்டனர்.

கிணறு தூர்வாரும் பணிக்காக கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த எந்திரத்தை செல்வம் என்பவர் ஆபரேட்டராக இருந்து இயக்கினார். நேற்று காலை தொழிலாளர்கள் கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மதியம் சாப்பிடுவதற்காக கிணற்றில் இருந்து கிரேன் மூலம் அனைவரும் மேலே வந்தனர். அப்போது திடீரென இரும்பு கயிறு (ரோப்) அறுந்து தொழிலாளர்கள் 5 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆபரேட்டர் செல்வம் சத்தம் போட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பார்த்தனர். அப்போது குப்புசாமி பலத்த காயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. மேலும் முருகன், பழனி, முனியப்பன், பெருமாள் ஆகிய 4 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அவர்கள், படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த குப்புசாமியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி இரும்பு கயிறு அறுந்து விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story