மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 March 2019 10:15 PM GMT (Updated: 4 March 2019 4:33 PM GMT)

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர்,

பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் வடிவிலான அய்யா வைகுண்ட தர்மபதி 187-வது ஆண்டு அவதார திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அய்யா வழி பக்தர்கள் காலை 5.30 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டை ராம நாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மாளிகையில் ஒன்று கூடினர்.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச் செய்த அகிலத்திரட்டு ஆகமம் வைக் கப்பட்டது.

ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் அய்யா வழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு நெற்றியில் திருநாமம் இட்டு குடும்பத்துடன், கைகளில் செங்கொடி ஏந்தியபடி, ‘அய்யா அரஹர... சிவ... சிவ... அய்யா உண்டு’ என்று பக்தி கோஷங்களை எழுப்பியபடி மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

ஊர்வலமானது நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜ தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக 20 கிலோ மீட்டர் தூரம் சென்று பகல் 12 மணி அளவில் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு அய்யா வழி பக்தர்கள் நீர்மோர், பழங்களை வழங்கினர். டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் தலைவர் ஆர்.பி.மனோகரன் தலைமையில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கினார்கள்.

பின்னர் மதியம் 12 மணியளவில் பணிவிடை உச்சிப்படிப்பும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை நடந்தது. 6 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் வலம் வந்தார். அதைத்தொடர்ந்து வைகுண்ட ஜோதி ஏற்றி இனிமம் வழங்கப்பட்டது.

Next Story