மாவட்ட மாறுதல் வழங்கியதை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்


மாவட்ட மாறுதல் வழங்கியதை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 8:49 PM GMT)

மாவட்ட மாறுதல் வழங்கியதை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 47 தாசில்தார்கள், 29 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் திருச்சி, சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்பட பலர் தங்களது பணியை புறக்கணித்து கலந்து கொண்டனர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பணிமாறுதல் செய்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் திரும்பபெறும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் போராட்டத்தினால் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, கலைந்து சென்றனர். இந்த உள்ளிருப்பு போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நேற்று மாலையில் விராலிமலை தாலுகா அலுவலகத்திற்குள் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வளர்மதி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை யிடத்து துணை தாசில்தார் சாந்தா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் செந்தில், சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story