ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2019 10:03 PM GMT (Updated: 4 March 2019 10:03 PM GMT)

ஈரோட்டில், காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு,

ஈரோடு திண்டல் ஓடைமேடு பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். மெக்கானிக். இவரும், ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சசிகலா (வயது 21) என்பவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகிழ்மதி என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் தந்தை இறந்து விட்டார். இதனால் அங்கு சென்ற சசிகலா பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வைத்தீஸ்வரன் மனைவி சசிகலாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சசிகலா வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று, சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

உடனே வைத்தீஸ்வரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சசிகலாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சசிகலா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து சென்று சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சசிகலாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசனும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story