நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.4½ கோடியில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி


நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.4½ கோடியில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி
x
தினத்தந்தி 4 March 2019 11:30 PM GMT (Updated: 5 March 2019 12:26 AM GMT)

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.4½ கோடியில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து ரூ.4 கோடியே 47 லட்சம் மதிப்பில் புதிய அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டு உள்ளது. இந்த கருவியில் கதிர்வீச்சு பாதிப்பு கிடையாது. சிறுநீரக, ஆஞ்சியோ பரிசோதனை வசதி உள்ளது. மூளையின் ரத்த ஓட்டத்தையும், முதுகுதண்டு வடத்தில் சவ்வு விலகல் நிலையையும் துல்லியமாக கணிக்க முடியும். இந்த அதிநவீன புதிய எம்.ஐ.ஆர். ஸ்கேன் கருவியையும், ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் சிகிச்சை சேவை மைய கட்டிடத்தையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அந்த கருவியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் டீன் கண்ணன், துணை முதல்வர் ரேவதி பாலன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்திஸ்ரீ, விவேக், சுந்தர்ராஜன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டீன் கண்ணன் கூறுகையில், “புதிய அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி ரூ.4 கோடியே 47 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்கேன் மூலம் அனைத்து பரிசோதனைகளையும் துல்லியமாக மேற்கொள்ள முடியும். இதில் ஸ்கேன் எடுக்க ரூ.2 ஆயிரத்து 500 கட்டணமாக வசூலிக்கப்படும். ஊசி மருந்து செலுத்தி ஸ்கேன் எடுத்தால் கூடுதலாக ரூ.1,500 வசூலிக்கப்படும். முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக எடுக்கலாம். இந்த பரிசோதனைகளை வெளியில் எடுத்தால் குறைந்தது ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகும். குழந்தைகளின் அனைத்து நோய்கள், குறைபாடுகளுக்கு ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உள்ள குறைபாடுகள், செவிதிறன், கண்பார்வை, உளவியல், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும், பேச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும்” என்றார். 

Next Story