நெல்லை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


நெல்லை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 5 March 2019 8:41 PM GMT)

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பேட்டை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் கசமுத்து (வயது 29) ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி உமா (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கனிமுத்து (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து உமாவை விட்டு விட்டு கசமுத்து, தனது குழந்தையுடன் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சிவராத்திரி பூஜை முடிந்த பின், நள்ளிரவில் அவர் குழந்தையுடன் வீடு திரும்பினார். அப்போது வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டை திறக்குமாறு நீண்டநேரமாக அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கசமுத்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது வீட்டில் உமா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கசமுத்து கதறி அழுதார் இதுகுறித்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story