இடையாத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 19 பேர் காயம்; பார்வையாளர் மயங்கி விழுந்து சாவு


இடையாத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 19 பேர் காயம்; பார்வையாளர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 6 March 2019 11:00 PM GMT (Updated: 6 March 2019 7:47 PM GMT)

இடையாத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 19 பேர் காயமடைந்தனர். பார்வையாளர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார்.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே இடையாத்தூரில் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரியையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி அய்யனார் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டினை இலுப்பூர் கோட்டாட்சியர் சிவராஜ் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 212 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 831 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் கீழத்தானியத்தை சேர்ந்த அறிவழகன் (வயது 22), ஆலவயல் வடக்கிப்பட்டியை சேர்ந்த முத்தையா (24), பார்வையாளர் முள்ளிப்பட்டி சக்திவேல் (26) உள்பட 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இடையப்பட்டியை சேர்ந்த சங்கர் என்கிற கருப்பையா (30) போட்டியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கருப்பையா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கருப்பையாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து கருப்பையா உடலை பிரேத பரிசோதனைக்காக பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், குத்து விளக்கு, நாற்காலி, குக்கர், மிக்சி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் துணை தாசில்தார் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் சாதிக்பாட்சா, கிராம நிர்வாக அதிகாரி பச்சையப்பன் மற்றும் புதுக்கோட்டை, காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில், அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இடையாத்தூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Next Story