அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீப்பிடித்தது கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீப்பிடித்தது கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 6 March 2019 9:09 PM GMT)

அரியமங்கலம் குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகள் கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவது வழக்கம். இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் பலமுறை மனு அளித்துள்ளனர். போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அங்கு உள்ள மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ மற்ற இடங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால், அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இத னால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர். பின்னர், 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். வெப்பம் அதிகரித்த காரணமே தீ பற்றி எரிந்ததாக அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், இதுபோன்று இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்த பகுதியில் வசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது. இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடத்தியும், மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. இதற்கு மேலும் இந்த குப்பை கிடங்கை அகற்றாவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். 

Next Story