ஓட்டப்பிடாரம் அருகே, கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு - டிரைவர் கைது


ஓட்டப்பிடாரம் அருகே, கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு - டிரைவர் கைது
x
தினத்தந்தி 6 March 2019 10:00 PM GMT (Updated: 6 March 2019 10:37 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே தனியார் உலர் பூ தயாரிப்பு கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் மேலசெய்த்தலையை சேர்ந்த மாரிமுத்து மகன் பொன்மாடசாமி(வயது 23), அவருடைய அக்காள் ஜெயலலிதா(25) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கம்பெனியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றனர்.

அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக பொன்மாடசாமி மீது மோதியது. ஜெயலலிதா சாலை ஓரத்தில் ஓடி தப்பினார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்மாடசாமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் தூத்துக்குடி கேம்ப்-2 பகுதியை சேர்ந்த வீரராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story