ஆரல்வாய்மொழி அருகே நின்ற கார் மீது மொபட் மோதல்; தொழிலாளி சாவு


ஆரல்வாய்மொழி அருகே நின்ற கார் மீது மொபட் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 7 March 2019 9:02 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே சாலையோரம் நின்ற கார் மீது மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பிள்ளைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 47). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக நாகர்கோவிலில் தங்கியிருந்து, வாரம் ஒருமுறை தனது வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின்பு, தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை பத்திரப்பதிவு அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் ஒரு கார் நின்றது. எதிர்பாராத விதமாக மொபட், காரின் பின்பகுதியில் மோதியது.

இதில் முத்துக்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் முத்துகுமார் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த முத்துகுமாருக்கு முத்துகிளி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

Next Story