கயத்தாறு அருகே, ரூ.75 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


கயத்தாறு அருகே, ரூ.75 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 7 March 2019 11:03 PM GMT)

கயத்தாறு அருகே ரூ.75 லட்சம் செலவிலான சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே வில்லிசேரியில் ரூ.75 லட்சம் செலவில் சிமெண்டு தள கற்கள் பதித்தல், தார் சாலை அமைத்தல், வாறுகால் பாலம் அமைத்தல் உள்ளிட்ட சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பூமி பூஜை செய்து சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கடம்பூரில் 15 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் அம்மா தாய்-சேய் நல பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியானது ஆண்டுக்கு ரூ.1½ கோடியாக இருந்ததை ரூ.2½ கோடியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்த்தி வழங்கினார். இதன்மூலம் கிராமப்புறங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகள் பயன்பெறும் வகையில் ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும் கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதற்காக அம்மா தாய்-சேய் நல பெட்டகம் வழங்கப்படுகிறது. இதுபோன்று ஏழைகளுக்கு நன்மைதரும் மகத்தான திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

கடந்த 1998-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 30 தொகுதிகளை வென்றார். இதன்மூலம் பா.ஜனதா முதன் முதலாக மத்தியில் ஆட்சி அமைத்தது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததை டி.டி.வி.தினகரன் விமர்சிப்பது, அவர் ஜெயலலிதாவை விமர்சித்து அவமரியாதை செய்வது போன்றது ஆகும். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே அ.தி.மு.க.வின் கூட்டணி இறுதி வடிவம் பெறும். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, கயத்தாறு தாசில்தார் முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் இலக்கியா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story