தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் பொதுவினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது


தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் பொதுவினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 8 March 2019 10:45 PM GMT (Updated: 8 March 2019 7:25 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் நடத்தப்படும் பொது வினியோகத்திட்ட ரேஷன்கடைகளில் நுகர்வோருக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும், தாலுகா அளவிலான குறைதீர்க்கும் முகாம்கள் மாதந்தோறும் தேர்வு செய்யப்பட்ட ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (சனிக்கிழமை) தாலுகா வாரியாக குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

இதன்படி பெரியகுரும்பட்டி (தர்மபுரி), திருமல்வாடி (பென்னாகரம்), போத்தளஅள்ளி (பாலக்கோடு), எட்டிப்பட்டி (அரூர்), ஜம்மனஅள்ளி (பாப்பிரெட்டிப்பட்டி), பூவல்மடுவு (நல்லம்பள்ளி), இருமத்தூர் (காரிமங்கலம்) ஆகிய 7 இடங்களில் உள்ள ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும்.

இந்த குறைதீர்க்கும் முகாம்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே ரேஷன் கடைகளில் பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.

சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் கோரிக்கை மனுக்களில் குறிப்பிடப்படும் குறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உடனுக்குடன் குறைகளை நிவர்த்தி செய்வார். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவல் தர்மபுரி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story