திருவாரூரில் 1,000 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்கள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்


திருவாரூரில் 1,000 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்கள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 6:57 PM GMT)

திருவாரூரில் 1,000 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

திருவாரூர்,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் மற்றும் கைத்தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெயா, நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து, 1,000 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கைத்தெளிப்பான்களை வழங்கி பேசினார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:-

பூச்சிகள், எலிகள் போன்றவற்றில் இருந்து விளை பொருட்களை பாதுகாத்து, ஈரப்பதத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுத்து, விவசாயிகள் உழைப்பின் பலனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் ஆகும். சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.

அங்கு வழங்கப்படும் ரசீதுகளை பெற்று வங்கியில் கடன் பெறலாம். விளை பொருளுக்கு நல்ல விலை வரும்போது சந்தையில் விற்று வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தலாம்.

இந்த ஆண்டு தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 3,000 விவசாயிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் 1,000 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் பொது மேலாளர் ரவிச்சந்திரன், முதுநிலை மண்டல மேலாளர் சரவணன், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, திருவாரூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story