சேலத்தில் ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


சேலத்தில் ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2019 9:30 PM GMT (Updated: 9 March 2019 8:21 PM GMT)

சேலத்தில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், 

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் ஸ்ரீநாத் (வயது 22). இவர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் 4–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஸ்ரீநாத் கல்லூரிக்கு சென்றார்.

பின்னர் அவர் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஸ்ரீநாத்தின் நண்பர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனிடையே ஸ்ரீநாத் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் ஸ்ரீநாத் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை அந்த வழியாக கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பார்த்தனர். அவர்கள் ஸ்ரீநாத் உடல் மீது ரெயில் ஏறிவிடக்கூடாது என்பதற்காக உடலை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கும், ரெயில்வே போலீசாருக்கும் மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மர்மமான முறையில் இறந்து கிடந்த ஸ்ரீநாத் உடலில் சிராய்ப்பு காயங்கள் உள்ளன. மேலும் ஒரு காது சிதைந்து போன நிலையில் இருந்தது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீநாத் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதாவது, ஸ்ரீநாத் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா?, தற்கொலை செய்து கொண்டாரா?, அவரை யாராவது அடித்து கொலை செய்து விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஸ்ரீநாத் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story