நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய 5 பேர் கைது


நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2019 10:30 PM GMT (Updated: 10 March 2019 4:42 PM GMT)

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிள்களும் திருடப்பட்டு வந்தன.

இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின்படி, துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் படி, உதவி கமிஷனர் மெக்லரின் எஸ்கால் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் மேலப்பாளையத்தை சேர்ந்த புதுராஜ் மகன் பாலமுருகன்(வயது 31), கிருஷ்ணன் மகன் ரஜினி (37), முருகன் மகன் ரஞ்சித் (20), மேலநத்தத்தை சேர்ந்த கண்ணன் மகன் குமரேசன் (20), அழகிரிபுரத்தை சேர்ந்த ராஜசெல்வன் (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் கொக்கிரகுளம் வழியாக வந்த ஒருவரிடம் வழிமறித்து மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மீட்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story