பா.ஜ.க.வின் ஆட்சியால் 1 கோடி இளைஞர்கள் வேலை இழப்பு கறம்பக்குடி கூட்டத்தில் பிருந்தா காரத் பேச்சு


பா.ஜ.க.வின் ஆட்சியால் 1 கோடி இளைஞர்கள் வேலை இழப்பு கறம்பக்குடி கூட்டத்தில் பிருந்தா காரத் பேச்சு
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 7:15 PM GMT)

பா.ஜ.க.வின் ஆட்சியால் நாட்டில் 1 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார். கூட்டத்தில் தேர்தல் நிதியாக ரூ.10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பெற்று கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். ஒரு கல்லில் 2 மாங்காய் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப தமிழக மக்கள் அளிக்க போகும் ஒரு ஓட்டில் மத்தியில் உள்ள மோடி அரசும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசும் வீழப்போகிறது.

மோடி ஆட்சியில் ஏழை தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள பெரும் பணக்காரர்களுக்கான அரசாகவே மோடி அரசு உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யவில்லை. மக்களை சந்தித்து ஆறுதல் கூற கூட பிரதமர் மோடிக்கு நேரமில்லை. ஆனால் கடந்த 15 நாட்களில் 4 முறை தேர்தலுக்காக தமிழகம் வந்து சென்றுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு பா.ஜ.க.வின் ஆட்சியால் நாட்டில் 1 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். ஆனால் தவறான புள்ளி விவரங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக மோடி அரசு கூறுகிறது. இதேபோல் குட்கா வழக்கில் ஆவணங்களை காணவில்லை என எடப்பாடி பழனிசாமி அரசு சொல்கிறது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. மத்திய, மாநில அரசுகள் 100 நாள் வேலை திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய கூலியும் முறையாக வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர்கள் சின்னத்துரை, நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் உடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுந்தர மூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக பிருந்தா காரத் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கு பிறகு எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதமர் யார் என்பதை கூட்டணி கட்சியினர் முடிவு செய்வோம் என்று கூறினார்.

Next Story