நெய்வேலியில் பெண், தீக்குளித்து தற்கொலை- சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்


நெய்வேலியில் பெண், தீக்குளித்து தற்கொலை- சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்
x
தினத்தந்தி 11 March 2019 10:45 PM GMT (Updated: 11 March 2019 9:03 PM GMT)

நெய்வேலியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தாய் புகார் கொடுத்துள்ளார்.

நெய்வேலி,

நெய்வேலி வட்டம் 1 சி.ஆர்.காலனி 6-வது தெருவை சேர்ந்தவர் பாக்கியநாதன். இவருக்கும் செடுத்தான் குப்பத்தை சேர்ந்த சிவகாமி(வயது 32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். சிவகாமி நெய்வேலி மெயின்பஜாரில் உள்ள நகைக்கடையில் வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிவகாமியின் தாய் சுந்தரவள்ளி, டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகாமிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கடலூர் சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Next Story