பிரதமர் மோடி ‘சூப்பர் மேன்’ அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


பிரதமர் மோடி ‘சூப்பர் மேன்’ அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 10:30 PM GMT (Updated: 11 March 2019 10:11 PM GMT)

‘பிரதமர் மோடி ஓர் சூப்பர் மேன்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சோழவந்தான், 

மதுரை பரவையில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசும்போது, “இந்திய மக்களின் ஒரே பாதுகாவலன் பிரதமர் மோடிதான். வருகிற தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா போராட்டம். ஆனால் இதில் தி.மு.க. ஒரு போதும் வெற்றி பெறாது” என்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் மேயர் திரவியம், வக்கீல் சீதாராமன், வக்பு வாரிய தலைவர் ஜமால் மைதீன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் செயல்பாடு குறித்து ஆலோசனை வழங்கினர். முடிவில் தங்கவேல் நன்றி கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, “மக்கள் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு தான். புலவாமா தாக்குதலுக்கான பதிலடியாக இந்திய விமானப்படை, தீவிரவாதிகள் மீது வெடிகுண்டுகளை வீசியது. பிரதமர் மோடி, ஓர் சூப்பர் மேனாக திகழ்கிறார். இதனால் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

பொங்கல் பரிசு ரூ.1,000, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2,000 நிதிஉதவி மற்றும் மத்திய அரசு திட்டமான விவசாயிகளுக்கு வழங்கும் ரூ.6,000 ஆகிய 3 திட்டங்கள் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், தி.மு.க.வை கதிகலங்க வைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் சில கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைவார்கள். வெயில் காலத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்கும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story