தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்


தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 March 2019 10:55 PM GMT (Updated: 11 March 2019 10:55 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

பாராளுமன்ற தேர்தல் 2019 மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய 2 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் நன்னடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவன்அருள், அரூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் தர்மபுரி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளை முறையாக கடைபிடித்து எதிர்வரும் தேர்தலை அமைதியாக நடத்த அரசு அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுதாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய 26-ந்தேதி கடைசிநாளாகும். 27-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 29-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசிநாளாகும். ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ந்தேதி நடைபெறும்.

தர்மபுரி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தர்மபுரியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். அரூர்(தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அரூர் உதவி கலெக்டர்அலுவலகத்தில் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் உள்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்த 48 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்தவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றன.

24 மணிநேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை el-e-ct-i-ons2019.dpi@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். இதேபோல் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 800 425 7017 மற்றும் குறுந்தகவல் மூலம் 8903891077 என்ற செல்போன் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதைத்தொடர்ந்து தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிக்கும்போது யாருக்கு வாக்களித்தோம் என்று சான்றளிக்கும் எந்திரத்தின் செயல்பாடு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story