தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணி


தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணி
x
தினத்தந்தி 12 March 2019 10:30 PM GMT (Updated: 12 March 2019 5:11 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது.

தேனி,

தேனி நகர் உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தன. கட்சி கூட்டங்கள், மாநாடுகள் தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதிலும் குறிப்பாக ஆற்றுப் பாலங்களின் தடுப்புச்சுவர், சாலையின் மையத் தடுப்புச்சுவர், சாலையோர தனியாருக்கு சொந்தமான சுவர்களில் அரசியல் விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நகராட்சி பகுதிகளில் எந்த இடங்களிலும் சுவர் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஒன்று. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தன.

நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தேனி நகரில் நேற்று சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தில் வரையப்பட்டு இருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இருப்பினும் நகரில் மேலும் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளன. அவை ஓரிரு நாட்களில் அழிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 3 நாட்கள் ஆகியும், கம்பம் அரசு போக்குவரத்து கழகத்தின் 2 பணிமனைகளின் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், கட்சி அறிவிப்பு பலகை, சுவரொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளன.

இதேபோல் நகரின் முக்கிய இடங்களில் கொடிக்கம்பங்கள், கொடிகள், சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை. எனவே தேர்தல் விதிகளை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story