பேராவூரணி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு வலைவீச்சு


பேராவூரணி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 March 2019 11:15 PM GMT (Updated: 12 March 2019 6:41 PM GMT)

பேராவூரணியில் உள்ள ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பேராவூரணி,

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முடிவடைந்து உள்ளது. இந்த பாதையில் இந்த மாத(மார்ச்) இறுதிக்குள் ரெயில் போக்குவரத்தை தொடங்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதே வழித்தடத்தில் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே முன்னதாகவே அகல ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.

இந்த வழித்தடத்தில் கடந்த சில மாதங்களாக வாரம் 2 முறை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த 1-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக பேராவூரணி ரெயில் நிலையம் விளங்குகிறது.

அகல ரெயில் பாதை பணிகளையொட்டி பேராவூரணி ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு இருந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிதாக அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு நடைமேடை மட்டுமே உள்ளது.

பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையேயான ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதால் கடந்த சில நாட்களாக பேராவூரணி ரெயில் நிலையம் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், வெடி குண்டு நிபுணர்கள் மூலம் பேராவூரணி ரெயில் நிலையத்தை சோதனையிட உத்தரவிட்டார். அதன்பேரில் தஞ்சையில் இருந்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவு சிறப்பு படையினர், மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பேராவூரணி போலீசார், ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3 மணிக்கு வந்தனர். இவர்கள் ரெயில் நிலையத்தின் அலுவலக அறைகள் மற்றும் தண்டவாளம் முழுவதும் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா? என சல்லடை போட்டு தேடினர்.

ரெயில் நிலையம் அருகே உள்ள பூனைகுட்டி காட்டாற்று ரெயில்வே பாலத்திலும் வெடிகுண்டு சோதனை நடந்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. மேலும் தொலைபேசியில் பேசிய மர்ம நபர், வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சாந்தி, திருவாரூர் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மதியம் ரெயில் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு வைத்து இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவாரூர்-காரைக்குடி இடையே பேராவூரணி வழியாக ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்க உள்ள நிலையில் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story