தர்மபுரி மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேட்டி


தர்மபுரி மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2019 10:15 PM GMT (Updated: 12 March 2019 8:35 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கூறினார்.

தர்மபுரி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

இந்தநிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாருக், இளவரசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படும். சுழற்சி முறையில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் கட்டுப்பாட்டு அறையில் தொடர் பணியை மேற்கொள்வார்கள். தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 8 மணி நேரத்திற்கு ஒரு முறை என சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மாவட்டம் முழுவதும் 484 பேர் துப்பாக்கி உரிமம் பெற்று உள்ளனர். அவர்கள் தேர்தலையொட்டி தங்கள் துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுவரை 157 பேர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து உள்ளனர். மற்றவர்களும் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து குடோன்களிலும் ஆய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டசபை தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு தர தேர்தல் ஆணையம் அறிவுறுத்தினால் அதற்கேற்ப பாதுகாப்பை அதிகரிக்க தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கூறினார்.

Next Story