மதுரவாயலில் டாஸ்மாக் பாரில் முதியவர் அடித்துக் கொலை மேற்பார்வையாளர் கைது


மதுரவாயலில் டாஸ்மாக் பாரில் முதியவர் அடித்துக் கொலை மேற்பார்வையாளர் கைது
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 5:47 PM GMT)

மதுரவாயலில் டாஸ்மாக் பாரில் முதியவரை அடித்துக் கொலை செய்ததாக மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

மதுரவாயல், மேட்டுக்குப்பம், பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனை ஒட்டி டாஸ்மாக் பாரும் உள்ளது.

இந்த பாரில் மகேந்திரன் (வயது 60) என்ற முதியவர் தங்கி துப்புரவு வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் பாருக்கு வெளியே படுத்திருந்த மகேந்திரன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, மதுரவாயல் உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்து விசாரணை செய்தனர்.

இதில் மகேந்திரனின் தலையின் பின் பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்பார்வையாளர் கைது

விசாரணையில், சம்பவத்தன்று மகேந்திரன் வேலைக்கு தாமதமாக வந்ததாகவும், அதற்கு அவரை மேற்பார்வையாளர் ராஜா கண்டித்துடன் தாக்கி அடித்ததாகவும் தெரிகிறது. இதில் அங்கு இருந்த கதவில் மகேந்திரன் தலை முட்டி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

Next Story