தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் பேச்சு


தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 6:52 PM GMT)

தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்த் தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதனை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்த் நேரில் பார்வையிட்டார். அதுசமயம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பராமரிக்கப்பட்டு வரும் புகார் பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800-425-7035 என்ற இலவச அழைப்பு எண்ணுடைய தொலைபேசி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை 04366-226120, 226121, 226123 ஆகிய தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி, தனி தாசில்தார் (தேர்தல்) சொக்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story