குன்னூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு


குன்னூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 7:41 PM GMT)

குன்னூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குக்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்திப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அதிகரட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கேத்தி பாலாடா அரசு உயர்நிலைப்பள்ளி, என்.எஸ்.அய்யா பள்ளி, கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்லநள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சென்று வாக்களிக்க சாய்வு தளம், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்றவை செய்யப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், குன்னூர் தாசில்தார் தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அச்சக உரிமையாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story