நெருப்பூர் அருகே, மொபட்டில் சென்றபோது கார் மோதி தாய்-மகன் பலி


நெருப்பூர் அருகே, மொபட்டில் சென்றபோது கார் மோதி தாய்-மகன் பலி
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 7:41 PM GMT)

நெருப்பூர் அருகே மொபட்டில் சென்றபோது கார் மோதியதில் தாயும், மகனும் இறந்தனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி இந்திராணி (வயது 47). கோவிந்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

கொண்டையனூரில் சத்துணவு அமைப்பாளராக இந்திராணி பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கார்த்திகேயன் (25), என்ற மகனும், பிரியா (22) என்ற மகளும் இருந்தனர். கார்த்திகேயன் பி.இ. பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். பிரியா சென்னையில் பல் மருத்துவக்கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை இந்திராணியும், மகன் கார்த்திகேயனும் நெருப்பூரில் இருந்து மொபட்டில் ஏரியூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மொப ட்டை கார்த்திகேயன் ஓட்டினார். பின்னால் இந்திராணி உட்கார்ந்து இருந்தார்.

நெருப்பூர் அருகே சென்றபோது அந்த வழியாக மூங்கில் மடுவில் இருந்து நெருப்பூர் நோக்கி ஒரு கார் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கார் திடீரென மொபட் மீது மோதியது. இதில் இந்திராணியும், கார்த்திகேயனும் படுகாயம் அடைந்தனர்.

உடனே 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த மூங்கில்மடுவை சேர்ந்த பெருமாள் (40) என்பவரை தேடி வருகிறார்கள். கார் மோதி தாயும், மகனும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story