பேராவூரணி பெரியகுளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க கூடாது கலெக்டர் உத்தரவு


பேராவூரணி பெரியகுளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க கூடாது கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 7:44 PM GMT)

பேராவூரணி பெரியகுளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க கூடாது என கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த பிளஸ்-2 தேர்வை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அப்போது மாணவிகளிடம் தேர்வு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பள்ளியில் மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து பேராவூரணி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம், தலைவர்களின் உருவ சிலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிலை அருகே கட்சி கொடி கம்பங்களில் கொடிகளை பறக்க விடக்கூடாது என அறிவுறுத்தினார்.

இதையடுத்து பேராவூரணி பெரியகுளத்தை பார்வையிட்ட அவர், கோடை காலம் வருவதால் குளத்தில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க கூடாது என்றும், தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் குளத்தில் தேங்கி நிற்கும் சிறிதளவு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது உதவி தேர்தல் அலுவலர் கமலக்கண்ணன், பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் யுவராஜ், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தேன்மொழி, பள்ளி தலைமை ஆசிரியை கஜானாதேவி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story