2-வது நாளாக ஊருக்குள் புகுந்தது, கூடலூர்-ஓவேலி சாலையில் உலா வந்த காட்டுயானை - பொதுமக்கள் பீதி


2-வது நாளாக ஊருக்குள் புகுந்தது, கூடலூர்-ஓவேலி சாலையில் உலா வந்த காட்டுயானை - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 8:09 PM GMT)

2-வது நாளாக ஊருக்குள் புகுந்த காட்டுயானை கூடலூர்-ஓவேலி சாலையில் உலா வந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கடந்த 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதிக்குள் காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர் சாலையில் நடந்தவாறு அந்த காட்டுயானை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக வந்தது.

இதைத்தொடர்ந்து கூடலூர்- ஓவேலி சாலையில் நடந்து வந்த காட்டுயானை அங்குள்ள சோதனைச்சாவடியை அடைந்தது. அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், வனத்துறையினர் காட்டுயானையை கண்டு ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் அப்பகுதியில் நின்றிருந்த காட்டுயானை அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2-வது நாளாக அந்த காட்டுயானை அதே பகுதியில் புகுந்தது. மேலும் கூடலூர்- ஓவேலி சாலையில் உலா வந்தது. இதை அறிந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர் அனைவரும் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் உடனடியாக காட்டுயானை அங்கிருந்து செல்லவில்லை.

மேலும் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றை காட்டுயானை தனது தந்தத்தால் தூக்கியது. பின்னர் கீழே இறக்கி வைத்தது. இதனால் எந்தவித சேதமும் இன்றி கார் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் நேற்று காலை 3.30 மணிக்கு காட்டுயானை அங்கிருந்து சென்றது. காட்டுயானையின் நடமாட்டத்தால் ஹெல்த்கேம்ப், அரசு மேல்நிலைப்பள்ளி, கெவிப்பாரா உள்ளிட்ட பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Next Story