சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2019 10:22 PM GMT (Updated: 13 March 2019 10:22 PM GMT)

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் சிவஜோதிநகர் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் கார்த்திக்(வயது 36). இவருடைய மனைவி சுகுணா(30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் அருகில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று வருவதாக சுகுணாவிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சுகுணா, தனது மாமனார் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். இருப்பினும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுகுணா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் மாடி வழியாக சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கார்த்திக் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story