நடத்தையில் சந்தேகம், தாயை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைப்பு


நடத்தையில் சந்தேகம், தாயை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 13 March 2019 9:30 PM GMT (Updated: 13 March 2019 11:11 PM GMT)

நடத்தையில் சந்தேகத்தால் தாயை கொலை செய்த வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவரது மனைவி ஜெயமேரி(வயது 51). இவர்களுக்கு அமலோற்பவநாதன்(28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயசேகர உடையார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்ற அமலோற்பவநாதன் அங்கிருந்த போலீசாரிடம் தனது தாயை கடந்த 5-ந் தேதி கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் அறைக்குள் அவரது பிணத்தை வைத்து பூட்டி வைத்து இருப்பதாகவும் கூறினார். 7 நாட்கள் அதே வீட்டில் தானும் வசித்து வந்ததாக கூறினார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடம் லாஸ்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் போலீசார் அவரை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக அமலோற்பவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயமேரிக்கு பல்வேறு வாலிபர்களுடன் கள்ள தொடர்பு இருந்தது. அவர் வாலிபர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதனை பார்த்த அமலோற்பவநாதன் தாயாரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை அவர் செல்போனில் வீடியோ கால் மூலம் அரைகுறை ஆடையுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனை பார்த்த அமலோற்பவநாதன் அவரை கண்டித்துள்ளார். அப்போது நான் அப்படித்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் இருந்த நாற்காலியை எடுத்து அவரை தாக்கியுள்ளார். இதில் ஜெயமேரி மயங்கி விழுந்தார். உடனே அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெயமேரியின் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை அறையிலேயே வைத்து பூட்டி விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று காலை ஜெயமேரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அமலோற்பவநாதன் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story