வெங்கல் அருகே லாரி மோதி தர்பூசணி வியாபாரி சாவு


வெங்கல் அருகே லாரி மோதி தர்பூசணி வியாபாரி சாவு
x
தினத்தந்தி 13 March 2019 9:30 PM GMT (Updated: 13 March 2019 11:11 PM GMT)

வெங்கல் அருகே லாரி மோதி தர்பூசணி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

பெரியபாளையம், 

சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). தர்பூசணி வியாபாரி. இவர் திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை என்ற கிராமத்துக்கு விவசாய நிலத்தில் உள்ள தர்பூசணியை மொத்தமாக வாங்க சென்றார். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மூலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி சென்ற லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சீனிவாசன் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story