அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 March 2019 9:45 PM GMT (Updated: 13 March 2019 11:12 PM GMT)

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டிச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தேவகோட்டையில் தையல் கடை வைத்து உள்ளார். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 23). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாமரைச் செல்வியை பிரசவத்திற்காக கடந்த 9-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அன்று மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு தாமரைச்செல்வி திடீரென இறந்தார். இதையடுத்து டாக்டர்களின் அலட்சிய போக்கால்தான் அவர் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தாமரைச்செல்வியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும் இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

Next Story