உடன்குடியில் லாரி மோதி பால் வியாபாரி தலை நசுங்கி பலி


உடன்குடியில் லாரி மோதி பால் வியாபாரி தலை நசுங்கி பலி
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 11:13 PM GMT)

உடன்குடியில் லாரி மோதி பால் வியாபாரி தலை நசுங்கி பலியானார்.

குலசேகரன்பட்டினம், 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரையைச் சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முத்துராமலிங்கம் (வயது 55). இவர் மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தனது மொபட்டில் தனியாக சென்றார். பின்னர் அவர் இரவில் கோவிலில் தங்கி விட்டு, நேற்று அதிகாலையில் மொபட்டில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

உடன்குடி-திசையன்விளை ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்ற போது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட முத்துராமலிங்கத்தின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்ததும் லாரியை நிறுத்தாமல் டிரைவர் தப்பி சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த முத்துராமலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு மண் ஏற்றி சென்ற லாரி மோதியதில் முத்துராமலிங்கம் இறந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரியை குலசேகரன்பட்டினம் பைபாஸ் ரோட்டில் நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி சென்றார். அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான லாரி டிரைவரான குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளிமுத்துவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story