பெண் என்ஜினீயர் தற்கொலை, 1-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் சோகம்


பெண் என்ஜினீயர் தற்கொலை, 1-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் சோகம்
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 7:14 PM GMT)

சிதம்பரத்தில் 1-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம், 

சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகள் ரம்யா(வயது 26). என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும் வருகிற 1-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோரும் தீவிரமாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் ரம்யா வீட்டில் வேலைகளை செய்யாமல் இருந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரம்யா அதே பகுதியில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் ரம்யா தூக்குப்போட்டு கொண்டார்.

அவர் தூக்கில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமதாஸ், சிதம்பரம் நகர போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் கண்டித்ததால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story