மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் ரோகிணி தகவல்


மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 7:50 PM GMT)

சேலம் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கு அளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அந்த வகையில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக, 18 வயது முடிவடைந்த இளைஞர் களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். அதே போன்று கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு ‘விழிப்புணர்வு சின்னம்‘ உருவாக்கப்பட்டு உள்ளது. இவை வாக்குப்பதிவு எந்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இளைஞர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்ற வகையில் முதல் கட்டமாக இந்த கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எனவே இளம் வாக்காளர்கள் அனைவரும் வருகிற ஏப்ரல் 18-ந்தேதியன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், வாக்காளர் பதிவு அலுவலர் சரவணன், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி மாணவ-மாணவிகள் இந்திய வரைபடம் போல் நின்று கொண்டு, அதில் ஏப்ரல் 18-ந்தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற ஆங்கில வாசகம் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story