நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வாக்களிக்க நடவடிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்


நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வாக்களிக்க நடவடிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 March 2019 8:00 PM GMT (Updated: 14 March 2019 8:00 PM GMT)

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிய 24 மணி நேரம் செயல்படும் செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகளோ அல்லது அவர்களது பெற்றோரோ 9445477699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளியின் வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி மற்றும் வாக்குச்சாவடி போன்ற தகவல்களை தெரிவிக்கலாம். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.

Next Story