பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம் 9 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு


பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம் 9 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு
x
தினத்தந்தி 14 March 2019 11:30 PM GMT (Updated: 14 March 2019 8:41 PM GMT)

கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ேவட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். தற்போதைய எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 20 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 8 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தோ்வு செய்வது குறித்து அக்கட்சியின் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பெலகாவி உள்பட பல்ேவறு தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். பெலகாவி தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது குறித்து அந்த தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

மேலும் தற்போது காங்கிரஸ் வசம் 10 தொகுதிகள் உள்ளன. அதில் துமகூரு தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது. அந்த தொகுதியை தவிர்த்து, மீதமுள்ள 9 தொகுதிகளில் தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 9 தொகுதிகள் போக மீதமுள்ள 11 தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மைசூரு தொகுதியை பொறுத்தவரையில் முன்னாள் மந்திரி விஜய்சங்கருக்கு டிக்கெட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

பெங்களூரு மத்திய தொகுதியில் ரோஷன்பெய்க் எம்.எல்.ஏ. அல்லது ரிஸ்வான் அர்ஷத் எம்.எல்.சி. ஆகிய இருவரில் ஒருவருக்கு டிக்கெட் கிடைப்பது உறுதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு தெற்கு தொகுதியில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. பிரியா கிருஷ்ணா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் துமகூரு மற்றும் சிக்கமகளூரு ஆகிய தொகுதிகள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Next Story