ஈரோட்டில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


ஈரோட்டில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 14 March 2019 9:45 PM GMT (Updated: 14 March 2019 10:52 PM GMT)

ஈரோட்டில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

ஈரோடு, 

ஈரோடு மோகன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். பொக்லைன் எந்திரம் டிரைவர். இவரது மனைவி கோபிகா (வயது 22). இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று இரவு சாப்பிட்டு விட்டு கோபிகா வீட்டின் முதல் மாடிக்கு தூங்கச்சென்றார். தமிழ்ச்செல்வனும் அவரது குடும்பத்தினரும் வீட்டின் தரை தளத்தில் தூங்கினார்கள். இந்த நிலையில் நேற்று காலை தமிழ்ச்செல்வன் கண்விழித்ததும் மனைவியை பார்ப்பதற்காக முதல் மாடிக்கு சென்றார். அங்கு மனைவி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கோபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோபிகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story