நெல்லை அருகே வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது


நெல்லை அருகே வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 11:05 PM GMT)

நெல்லை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் கெங்கைபாண்டி (வயது 23). இவர் சம்பவத்தன்று நெல்லைக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். அவர் நெல்லை அருகே அபிஷேகப்பட்டியை அடுத்த வெள்ளாளன்குளம் விலக்கு அருகில் வந்தபோது அவரை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கெங்கைபாண்டி உறவினரான கொண்டாநகரத்தை சேர்ந்த கணேசன் (33), அவருடைய மனைவி முப்புடாதி, நெட்டூர் காந்திநகரை சேர்ந்த சுடலை என்ற குமார் (30), நெட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சக்தி ஆகியோர் மீது சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கனவே கணேசன், குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து இருந்தனர்.

சக்தி, முப்புடாதி ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் சக்தியை சீதபற்பநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் முப்புடாதியை வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story