பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் - நாகை அருகே நடந்தது


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் - நாகை அருகே நடந்தது
x
தினத்தந்தி 15 March 2019 10:45 PM GMT (Updated: 15 March 2019 6:28 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நாகை அருகே கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும், கல்லூரி மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகையை அடுத்த செல்லூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்ததால், கல்லூரி வளாகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிபாசு தலைமை தாங்கினார்.

பல்வேறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது அரசியல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையிலான போலீசார் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story