பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட போலீஸ் அதிகாரியை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் - தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி-பரபரப்பு


பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட போலீஸ் அதிகாரியை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் - தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி-பரபரப்பு
x
தினத்தந்தி 15 March 2019 11:30 PM GMT (Updated: 15 March 2019 8:00 PM GMT)

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட போலீஸ் அதிகாரியை கண்டித்து பொள்ளாச்சியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், மாதர் சங்கம், த.மு.மு.க. உள்பட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கோவை ரோட்டில் காந்தி சிலையில் இருந்து சக்தி ஹோட்டல் வரையும், சப்-கலெக்டர் அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தை சுற்றியும் ஏராளமான மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட 1500 பேர் கலந்துகொண்டனர். பின்னர் மனித சங்கிலி போராட்டம் முடிந்ததும், காந்தி சிலை சந்திப்பு மைய பகுதிக்கு திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பாலக்காடு ரோடு, கோவை ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ஆச்சிப்பட்டி வசந்தகுமாருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்ய உதவி செய்ததாக தெரிகிறது. இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆத்திரம் அடைந்து அவரை தாக்க முயன்றனர்.

இதற்கிடையில் அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் வந்து தடுத்தனர். ஆனால் அவரை விடாமல் கோஷம் எழுப்பியவாறு துரத்தி சென்றனர். அவரை போலீசார் பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது.

Next Story