காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தங்கை திட்டியதால் விஷத்தை குடித்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை


காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தங்கை திட்டியதால் விஷத்தை குடித்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 March 2019 10:15 PM GMT (Updated: 15 March 2019 8:00 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தங்கை திட்டியதால் விஷத்தை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பாண்டுகுடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி அபிராமி (வயது 29). சங்கரும், அபிராமியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சங்கர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிராமியின் வீட்டுக்கு அவரது தங்கை ஜமீனா(25) வந்து நான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

அதனைக்கேட்ட அபிராமி தான் காதலித்து திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதாகவும், இதனால் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். தனது காதலுக்கு அக்காள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஜமுனா, அபிராமியை திட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். தங்கை தன்னை திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அபிராமி விஷத்தை குடித்து விட்டு கீழே மயங்கி விழுந்தார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி உயிரிழந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story