ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 15 March 2019 10:45 PM GMT (Updated: 15 March 2019 8:12 PM GMT)

ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராசிபுரம்,

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி, கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் என பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் வாக்காளர் உறுதி மொழியை வாசித்தார். மற்றவர்கள் அதை திரும்ப சொல்லி உறுதி மொழியை ஏற்றனர். பிறகு அங்கிருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

இந்த ஊர்வலத்தில் உதவி தேர்தல் அலுவலர் சந்திரா, மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மாலா, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story