சேலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது


சேலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 March 2019 11:00 PM GMT (Updated: 15 March 2019 8:26 PM GMT)

தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று நடந்தது.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சேலத்தில் தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் ரோகிணி பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். அதே போன்று மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடி உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் நேரில் சென்று மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே போன்று பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்கு அளிப்பது குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதே போன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதையும் ஆய்வு செய்ய வேண்டும். குறைபாடுகள் இருப்பின் உடனடி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்தல் நாளன்று மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் வரை தீவிர பணியில் ஈடுபட வேண்டும். எனவே தேர்தல் பணி குறித்து அலுவலர்களுக்கு எந்த வித சந்தேகமும் இருக்ககூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story