நீர்நிலைகளை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


நீர்நிலைகளை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 March 2019 10:45 PM GMT (Updated: 15 March 2019 9:22 PM GMT)

நீர் நிலைகளை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளுக்கே பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கத்தில் தேசிய தண்ணீர் குழுமம், தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தேசிய தண்ணீர் குழும தலைவர் ராஜேந்திர சிங், தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க தலைவர் குருசாமி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி.யும், ஆறுகள் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான ஜான்நிக்கல்சன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் தேசிய தண்ணீர் குழும தலைவரும், நீர் சமூக ஆர்வலருமான ராஜேந்திர சிங், நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர்நிலைகளை பாதுகாக்கும்...

இந்த கூட்டத்தில் இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்தும், தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.

நீர்நிலைகளை பாதுகாத்து மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்குவதாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்குத்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். நீர்நிலைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து உள்ளோம்.

ஆக்கிரமிப்பு

நீர் ஆதாரங்களை பாதுகாக்க நதிநீர் இயக்கத்தை நடத்தி வருகிறோம். நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மன்னர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு மக்களின் பாதுகாப்பில் அந்தந்த கிராமங்களில் குடிமராமத்து செய்யப்பட்டு தமிழகத்தில் இருந்த 38 ஆயிரம் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

நிலத்தடிநீர் பாதுகாப்பு, வடிவமைப்பதில் அரசு பின் தங்கி உள்ளது. மக்களுக்கு குடிநீர், விவசாயம் அதன் பின்னர்தான் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்ற நீர் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் வகுத்து உள்ளன. ஆனாலும் தொழிற்சாலைக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விழிப்புணர்வு

நீர் அறிவு, நிலத்தடிநீர் மேம்படுத்த, நீர் பிரச்சினைகள் தீர்க்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். இதில் அரசும், அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும். நடிகர்கள் அமிதாப், ரஜினிகாந்த் போன்றவர்கள் நீர் பிரச்சினை குறித்து பேசியுள்ளனர். நீர் ஆதாரத்தை பாதுகாக்க அரசியல் கட்சிகள் கொள்கை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் தலைமையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story