தேசியவாத காங்கிரஸ் சார்பில் 2-வது கட்ட பட்டியல் சரத்பவார் பேரன், சகன்புஜ்பால் உறவினர் உள்பட 5 வேட்பாளர்கள் அறிவிப்பு


தேசியவாத காங்கிரஸ் சார்பில் 2-வது கட்ட பட்டியல் சரத்பவார் பேரன், சகன்புஜ்பால் உறவினர் உள்பட 5 வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2019 10:13 PM GMT (Updated: 15 March 2019 10:13 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் 2-வது கட்டமாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக போட்டியிட உள்ளன.

இந்தநிலையில் இரு கட்சிகள் சார்பிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் குறிப்பாக பாராமதி தொகுதியில் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே மீண்டும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

சரத்பவார் பேரன்

இந்தநிலையில் 2-வது கட்டமாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித்பவாரின் மகன் பார்த், மாவல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பார்த், சரத்பவாருக்கு பேரன் உறவுமுறையாவார். தனது குடும்பத்தில் இருந்து 2 பேர் போட்டியிட இருப்பதால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சரத்பவார் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் முன்னாள் மந்திரி சகன் புஜ்பாலின் உறவினர் சமீர் புஜ்பாலுக்கு நாசிக் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசேனாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த டி.வி. நடிகர் அமோல் கோலேவுக்கு சிரூர் தொகுதியும், தன்ராஜ் ஹரிபாகுவுக்கு திண்டோரி தொகுதியும், பஜ்ரங் சோனாவானேவுக்கு பீட் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story