மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின்னர் விடுபட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் - காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நமச்சிவாயம் பேட்டி


மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின்னர் விடுபட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் - காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நமச்சிவாயம் பேட்டி
x
தினத்தந்தி 15 March 2019 11:04 PM GMT (Updated: 15 March 2019 11:04 PM GMT)

மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின்னர் புதுவை தேர்தல் அறிக்கையில் விடுபட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் புதுவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ், தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தனவேலு, தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் முடிவில் காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கடந்த 2¾ ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்த சாதனைகள் குறித்தும், பா.ஜ.க. அரசினால் மக்கள் படும் வேதனைகள் குறித்தும் மக்களிடம் எடுத்து கூற திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை (அதாவது இன்று) காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அறிவிப்பார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

இந்த 2 வேட்பாளர்களின் வெற்றிக்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும். மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல்காந்தி பிரதமராக வருவார். அதன் பின்னர் புதுவை சட்டமன்ற தேர்தலின்போது அறிவிக்கப்பட்டு விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story