மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டி


மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டி
x
தினத்தந்தி 15 March 2019 9:30 PM GMT (Updated: 15 March 2019 11:05 PM GMT)

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

மதுரை,

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட மதுரை தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியான சற்று நேரத்தில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார்.

இவர் மதுரை திருப்பரங்குன்றத்தை பூர்வீகமாக கொண்டவர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்த வெங்கடேசன் தாலுகா செயலாளர், மாவட்ட குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தற்போது மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய அவர், தற்போது அந்த சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார்.

வெங்கடசேன் எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற நூலுக்கு கடந்த 2011-ம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது. தான் எழுதிய முதல் நூலிலேயே, அவர் இந்த சாதனையை படைத்தார். இந்த நூலை தொடர்ந்து வெங்கடேசன் இதுவரை நான்கு கவிதை தொகுப்புகள் மற்றும் கலாசாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரிகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை உள்பட 16 நூல்களை எழுதி உள்ளார்.

வெங்கடேசனின் மனைவி பி.ஆர்.கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் 1970-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி பிறந்தவர். அதன்படி அவரது பிறந்த நாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் பரிசாக, அவர் மதுரை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த கட்சியினர் தெரிவித்தனர்.

கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 1968-ம் ஆண்டு முதல் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் எம்.பி.யான இவர் கோவை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்தவர். மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி, 8 மேம்பாலங்களுக்கு ஒப்புதல் பெற்றார். இதில் 5 பாலப் பணிகள் முடிந்துள்ளது. இவருக்கு வனஜா என்ற மனைவியும், ஆர்த்தி, அருணா என்ற 2 மகள்களும் உள்ளனர். 

Next Story