பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 March 2019 10:00 PM GMT (Updated: 15 March 2019 11:05 PM GMT)

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா காக்கனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாயன் (வயது 52), கூலித்தொழிலாளி. இவர், அந்த பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி பால் வாங்க கடைக்கு சென்றபோது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வழிமறித்து அருகில் உள்ள கட்டிடத்துக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் 23.8.2015 அன்று நடந்தது. இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், ‘மாணவியை இழுத்து சென்று மிரட்டியதற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜராகி வாதாடினார். 

Next Story