குடியாத்தம் அருகே காரில் எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது


குடியாத்தம் அருகே காரில் எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது
x
தினத்தந்தி 15 March 2019 9:45 PM GMT (Updated: 15 March 2019 11:05 PM GMT)

குடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

குடியாத்தம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பணப் பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வேளாண்மை அலுவலர் உமாசங்கர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் ஏட்டு பிச்சாண்டி ஆகியோர் குடியாத்தம் - சித்தூர் ரோடு பாக்கம் கிராமம் அருகே நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்தூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 700 இருந்தது.

இதனையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்திய போது மாதனூரை அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பதும், சித்தூரில் கிரானைட் கற்கள் வாங்க பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 லட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து குடியாத்தம் தாசில்தார் சாந்தி, துணை தாசில்தார் பலராமன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story